
திருமுறை பிரபந்த வகநயையும், பன்னிரண்டாவது திருமுறை புராணவகையையும் சாரும். இத்திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரமாலை எனவும், தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கும் திருமந்திரமாகும்.
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களால் அமைந்துள்ளது. ஒன்பது தந்திரங்களும் ஒன்பது ஆகமங்களின் சாரமாகும். தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரமாகும். முதல் இரண்டு சாத்திர நூல்களான திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் திருமந்திரத்தின் வழி வந்தவையே எனக்கூறலாம். திருமூலர் திருவாவடுதுறையில் தங்கி மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாகக் கூறுவர்.
பாயிரம்
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
கடவுள் வாழ்த்து
ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. (1)
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. (2)
ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே. (3)
அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து என்றனைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. (4)
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரை யானே. (5)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. (6)
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. (7)
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. (8)
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே. (9)
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடல் ஆமே. (10)
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே. (11)
கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே. (12)
மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே. (13)
கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே. (14)
ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. (15)
கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள் நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே. (16)
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே. (17)
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே. (18)
இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதியாக அமருகின்றானே. (19)
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலை அது தானே. (20)
வானப் பெருங்கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே. (21)
மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே. (22)
வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே. (23)
போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே. (24)
பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே. (25)
தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமல மலர் மேலே
உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே. (26)
சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே. (27)
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன் ஆகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே. (28)
காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே. (29)
வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே. (30)
மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. (31)
தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவு பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே. (32)
பதிபல ஆயது பண்டு இவ் வுலகம்
விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே. (33)
சாந்து கமழுங் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே. (34)
ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக்கும் கிழக்குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே. (35)
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே. (36)
நானும் நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்று ஆர் மதிபோல் உடல்உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்றவாறே. (37)
பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத் தவன் யானே. (38)
வாழ்த்தவல்லார் மனத்துள் உறுசோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே. (39)
குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே. (40)
சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சிடை போற்றவல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றானே. (41)
போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகனால் முடி செய்து அதுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்து ஒன்றுந்தானே. (42)
அரன்அடி சொல்லி அரற்றி அழுது
பரன்அடி நாடியே பரவிப் பன்னாளும்
உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. (43)
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. (44)
விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே. (45)
அந்திவண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்திவண்ணா முதல்வா பரனே என்று
வந்திவ் வண்ணன் எம் மனம்புகுந் தானே. (46)
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பந் தானே. (47)
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே. (48)
பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே. (49)
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யானின் றறிவது தானே. (50)
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. (51)
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. (52)
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உரு ஆகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே. (53)
திருநெறி ஆவது சித்த அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமா நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. (54)
ஆற அங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. (55)
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே. (56)
அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (57)
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் யானே. (58)
பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்னவாறே. (59)
அண்ணல் அருளால் அருளுந் திவ்ய் ஆகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்து அது ஆகுமே. (60)
பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே. (61)
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமேசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே. (62)
பெற்ற நல் ஆகமங் காரணங் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. (63)
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே. (64)
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே. (65)
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே. (66)
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. (67)
நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளா அது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யானிருந் தேனே. (68)
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே. (69)
நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்றது எல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (70)
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டுகிலானே. (71)
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்று அண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே. (72)
நந்தி இணையடி யான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரன் அடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே. (73)
செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே. (74)
இருந்தஅக் காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே. (75)
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே உணர்ந்தோமால். (76)
மாலாங்கனே இங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே. (77)
நேரிழை ஆவாள் நிரதிசய ஆனந்தப்
பேருடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே. (78)
சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே. (79)
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே. (80)
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. (81)
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நற்போதியின் கீழே. (82)
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந்தேனே. (83)
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களின்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. (84)
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. (85)
பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. (86)
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. (87)
அடிமுடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே. (88)
பெற்றமும் மானும் மழுவும் பிரிவு அற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே. (89)
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே. (90)
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பில் கயிலை வழியில் வந்தேனே. (91)
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந்தேனே. (92)
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. (93)
பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன் எம்மானை
இயற்றிகழ் சோதி இறைவனுமாமே. (94)
ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறிவார் இந்த அகலமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறியாமை விளம்புகின்றேனே. (95)
பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்
ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்
தேடவல்லார் நெறி தேடகில்லேனே. (96)
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே. (97)
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப் பயனறியாரே. (98)
மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. (99)
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்புத் தரும் இவை தானே. (100)
இதையும் படிக்கலாம் : கடவுளை வழிபடும் முறைகள்..!