ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல்

ஐயப்ப பக்தர்கள் தினமும் ஐயப்பனை வழிபாடு செய்யும் போது பாட வேண்டிய ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல்.

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல்

சாமியே சரணம் ஐயப்பா

சங்கரன் மகனே ஐயப்பா

பூமியில் எங்கும் சிறந்தவனே

புண்ணிய நெஞ்சில் நிறைந்தவனே.   (சாமி)

உலகினில் நன்மை பெருகிடவே

உண்மையும் அன்பும் நிறைந்திடவே

நலமருள் தெய்வமே சாஸ்தாவே

நானிலம் போற்றும் ஐயப்பா.   (சாமி)

பரிகரி புலிமேல் அமர்பவனே

பாங்குடன் எம்மை ஆள்பவனே

அரிஹரன் மகனே ஐயப்பா

ஆண்டவனே எங்கள் ஐயப்பா.   (சாமி)

வந்தனை செய்தோம் நின்பதமே

வாழும் வகையெலாம் தந்தருள்வாய்

கந்தப் பெருமான் தம்பியெனுங்

கருணையின் தெய்வமே ஐயப்பா.   (சாமி)

பஞ்சம் போக்குவாய் உலகினிலே

பாரினர் யாவர்க்கும் அருள்தருவாய்

நெஞ்சில் நிறையும் பூரணமே

நின்னடி சரணம் ஐயப்பா.   (சாமி).

உண்மைத் திருவே அருளமுதே

ஒளிதரு சுடரே சுடரொளியே

வண்மை அருள்வாய் மணிகண்டா

வாழ்வுத் தருவாய் ஐயப்பா.   (சாமி)

மாந்தரின் தெய்வ மணிவிளக்காய்

மலைமேல் யோகம் அமர்ந்தவனே

காந்த மலைமேல் ஜோதியெனக்

காட்சி கொடுக்கும் ஐயப்பா.   (சாமி)

பன்னிரு வருடம் பூமியின்மேல்

பாலனாய் வந்து வளர்ந்தவனே

என்னிரு கண்ணே கண்ணொளியே

எழில்மிகு சபரியின் ஐயப்பா.   (சாமி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *