முந்துதமிழ் மாலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 91 

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி – யுழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு – முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு – நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது – வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார – முடிமேலே

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார – எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார – எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முலை முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 92 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *