நாச்சியார் திருமொழி – நாமமாயிரம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன்போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (1)

இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே (2)

குண்டுநீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண்திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (3)

பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (4)

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே (5)

முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல் (6)

பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை
யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஓதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில்வந்து சிதையேலே (7)

வட்டவாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் வண்ணனே (8)

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் (9)

சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே (10)

நாச்சியார் திருமொழி – கோழியழைப்பதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *