கண் திருஷ்டியை போக்க சில எளிய வழிகள்!

கண் திருஷ்டி

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.

நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ஹார்ட் வொர்ட் விட ஸ்மார்ட் வொர்க் தான் பெஸ்ட் என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!

சிலரது பொறாமை குணம் நம் மீது வெறுப்பாகவும், அர்த்தமில்லாத கோபமாகவும் மாற்றிடும். அதுவும் முன்னேறிக் கொண்டே செல்பவர்கள் திடிரென சறுக்கினால் கண் திருஷ்டி பட்டுருக்கும் அதான் இப்படி நடக்குது என்று சொல்வோம். அப்படி தொடர் தோல்விகள் ஏற்ப்பட்டால் அல்லது கண் திருஷ்டி பட்டிருக்கும் என்று நினைத்தால் அவற்றை நீக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எப்படி கண்டுபிடிப்பது?

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம்.

வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.

தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.

கவனிக்கவேண்டியவை

திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.

தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.

கண் திருஷ்டியை போக்க

கால் கட்டை விரல்

பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

மலர்கள்

வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது.

வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.

தண்ணீர்

நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து தொடர்ந்து ஆச்சரியப்பார்வையை வீசினால் அல்லது பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்.

இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

மீன் தொட்டி

இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

உப்பு

குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல்,அலர்ஜி எதாவது ஏற்ப்பட்டால் நீங்கிடும்.

இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.

குழந்தை

கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து,தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.

எலுமிச்சை

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.

வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.

வாழை

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய்,அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.

இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.

ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

படிகாரம்

நமது உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம்.

கடைகளில் படிகாரக் கல் என்றே கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும்.

தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள்.

படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

ஆகாய கருடன் கிழங்கு

கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது “ஆகாய கருடன் கிழங்கு”.இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

இதை வாங்கி கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல் தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண் திருஷ்டி நீங்கி விடும். இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது.

செப்புக் காசு

குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது.

சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது.

கடுகு

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிட வேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு

அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம். வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீா் தெளிக்க வேண்டும்.

வீட்டில் நச்சுக் கிருமிகளைக் கொண்ட கழிவறை, குளியலறை தீய சக்திகளின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தக் கழிவறையின் கதவுகளை ஒரு போதும் திறந்து வைத்திருக்கக் கூடாது. மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய ஒரு அறை இது. ஆனால் பெரும்பாலானோரின் வீடுகளில் இதைக் கவனிப்பதே இல்லை. அவர்கள் அடையும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்தக் கழிவறையிலிருந்து எழும் நெகடிவ் அல்லது தீய சக்தியே என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இந்த நெகடிவ் எனர்ஜியை அல்லது தீய விளைவை நீக்க ஒவ்வொரு கழிவறையிலும் கல் உப்பை ஒரு கிண்ணம் நிறைய நிரப்பி அங்குள்ள ஜன்னல் விளிம்பில் அல்லது சவுகரியமான ஒரு இடத்தில் வைக்க வேண்டும். இந்த கல் உப்பு உடனடியாக நெகடிவ் எனர்ஜியை உறிஞ்ச ஆரம்பிக்கும்.

இதனால் வீட்டில் ஏற்படும் பலன்கள் அற்புதமாக இருக்கும். அது உடனே தெரியவும் ஆரம்பிக்கும். உப்பு சொதசொதப்பாக ஆனாலோ அல்லது ஈரப்பதம் அதிகமாகி விட்டாலோ அதை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக கல் உப்பை நிரப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *