முருகன் கை வேல் தோன்றிய வரலாறு

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது.

வேலாயுதம் தோன்றிய வரலாறு

காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர். அவன் தான் பெற்ற வரபலத்தால் எட்டுத் திக்கிலும் படை நடத்தி, எல்லோரையும் அடிமைப் படுத்தினான்.

அவனைக் கண்டு தேவர்கள் ஓடினர். அவர்கள் கடலில் மீனாகவும், காட்டில் பறவைகளாகவும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று. அவன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர்.

சிவபெருமான், அவர்களிடம், அஞ்சாதீர்! அசுரர்களை அழித்து ஒழிக்கத்தக்க ஒருமகனைத் தருகிறேன். அவனால் கவலைகள் விரைவில் தீரும் என்று கூறித் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதன் வெப்பம் தாங்காது அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடினர். அக்னிதேவன் அந்த ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருப்பெற்றன.

சிவனும், பார்வதியும் அங்கு சென்றனர். பார்வதிதேவியார் அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர வாரி அணைத்தாள். அக்கணத்தில் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு தோள்களும், இரண்டு திருவடிகளும் கொண்ட அழகிய குமரனாகியது.
உமையவள் அவனுக்குக் கந்தன் என்று பெயர் சூட்டினாள். கார்த்திகைப் பெண்களிடம் அவனை வளர்த்து வரச் சொன்னாள். கந்தனோடு நவவீரர்களும் தோன்றினர். கந்தன் நவவீரர்களுடன் சில காலம் விளையாடி மகிழ்ந்தான்.

பிரணவத்திற்குப் பொருள் உரைத்தும். நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய ஆட்டை வாகனமாக ஏற்றும், அவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிவபெருமான் முருகனை அழைத்து, குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு உமாதேவியிடம், முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக என்றார். அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும், விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும்.

முருகனுக்கும் சூரபதுமனுக்கிடையே நடந்த போரில், முருகன் வேலைப் பயன்படுத்தி சூரபதுமனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது. முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள். இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையுள்ளது.

அலகு குத்துதல்

முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது.

அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்பது பெயர். பெரிய சிவாலயங்களிலும் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களிலும் சில அம்மன் கோயில்களிலும் மகா கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டிகளில் நிறைவு பெறும். இதனைக் கந்த சஷ்டி விரதம் எனவும் அழைப்பர்.

பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். சில ஆலயங்களில் முருகனுக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, காலையும் மாலையும் முருகன் வீதி உலா நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது முருகன் சூரபத்மனையும் அவனது அசுரக் கூட்டங்களையும் அழிக்கும் ஐதீக நாடகம் நடத்தப்படும். இந்த நாடகத்தில் முருகன் நவவீரர், நாரதர் ஆகியோரின் வேடம் தரித்து ஒரு கூட்டமும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி, பானுகோபன், அவனது சேனாதிபதிகள் மற்றோர் கூட்டமும் ஆக இரண்டு பிரிவினராக இருந்து நாடகத்தை நடத்துகின்றனர். இந்த இரு சாரருமே காப்பு கட்டிக் கொண்டு விரதமிருப்பர். சூரசம்ஹார நாளான சஷ்டியன்று பிற்பகலில் முருகன் நவவீரர்கள் நாரதர் வேடமிட்டவர்கள் கூட்டமாக அம்பிகை சந்நதியின் முன்பு நிற்பர். அலங்கரிக்கப்பட்ட முருகன் திருவுருவத்தை எடுத்து வந்து அம்பிகை சந்நதிக்கு நேர் எதிரில் நிறுத்துவர்.

முதலில், நாரதர் வேடம் தரித்தவர் காசிப முனிவனுக்கு மாயையிடம் சூரபத்மனும் தம்பி தங்கையரும் அசுரக் கூட்டங்களும் பிறப்பது; அவர்கள் தவம்; 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆண்டது; அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்தது; தேவர்கள் துன்பம் தாள மாட்டாமல் சிவபெருமானைச் சரண் அடைந்தது; சிவபெருமான் முருகனைப் படைத்து அளித்தது; முருகன் பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்தது; தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முருகனை அழைத்து சூரபத்மனை அழித்து வர ஆணை தந்தது; முருகன் அதை ஏற்றுக் கொண்டு அன்னையின் அனுமதி வேண்டி அவள் வாயிலில் நிற்பது வரையிலான கதையைச் சுருக்கமாக பாடலாகவோ, விருத்தமாகவோ, உரை நடையாகவோ கூறுவார். பின்னர் அம்பிகையைத் துதித்துப் பாடல்கள் பாடப்படும். அம்பிகை ஆசி வழங்குவதுடன் வேல் தருவதாகக் கூறும் பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சர்வ வாத்தியங்களும் முழங்க அம்பிகைக்கும் முருகனுக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடக்கும். பின்னர் அர்ச்சகர் அம்பிகையின் கையில் வைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து முருகன் திருக்கரத்தில் வைப்பார்.

ஊர்ப் பெரியவர்கள், ஊர்ப் பொதுவில் வழிபடப்படும் கனத்த இரும்பு வேலாயுதத்தை எடுத்து வந்து முருகன் வேடமிட்டவரிடம் அளிப்பார். உடனிருக்கும் நவவீரர்கள் வேடம் புனைந்தவர்கள் வில்லம்பு அல்லது நெடிய பட்டாக்கத்தியைத் தாங்குவர். அவர்கள் அம்பிகையை வணங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு வீதி உலாவாகச் செல்வர். முருகனைக் குதிரை அல்லது ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்த்தித் தம்முடன் எடுத்துச் செல்வர். இதுவே பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும்.

எண்ணற்ற தலங்களில் இத்தகைய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், அவற்றில் தலையானதாக இருப்பது சிக்கலில் நடைபெறுவதுதான். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம். முருகனுடன் தோன்றிய வீரவாகுதேவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்று புராணம் போற்றும் செங்குந்தர்களான கைக்கோளர்கள் பெரும்பாலான ஊர்களில் சூரசம்ஹார நாடகத்தினை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் செட்டியார்கள் நடத்துகின்றனர்.

சிவபெருமானிடமிருந்து முருகன் வேல் வாங்குதல் பொதுவாக சூரசம்ஹார விழாவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியே அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. அபூர்வமாக சில தலங்களில் சிவபெருமானிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தின்போது முருகன் சபைக்கு எழுந்தருள்கின்றார். அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும் முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர். நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார். முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார்.

“வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
வேல் முருகா வேல்”

இதையும் படிக்கலாம் : முருகனின் 16 வகை கோலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *