இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram District)

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று. இம் மாவட்டத்தின் தலைமை இடம் இராமநாதபுரம். கடல் சூழ்ந்த இந்த மாவட்டம் தென் தமிழகத்தில் இருக்கிறது.

இம்மாவட்டம் 4068.31 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கே பாக் கடல், வடக்கே சிவகங்கை மாவட்டம், வடகிழக்கே புதுக்கோட்டை மாவட்டம், தெற்கே மன்னார் வளைகுடா, மேற்கே மதுரை மாவட்டம், தென்மேற்கே தூத்துக்குடி மாவட்டம் ஆகியவை உள்ளன.

இந்து மக்களின் புனித தலமான இராமேஸ்வரம் கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது.

மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
பகுதி தென் மாவட்டம்
பரப்பளவு 4068.31 ச.கி.மீ
மக்கள்தொகை 13,53,445
அஞ்சல் குறியீடு 623 xxx
தொலைபேசி குறியீடு 04567
வாகனப் பதிவு TN-65

வரலாறு

இராமநாதபுரம் மாவட்டத்தை கி.பி.1063-ம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றி ஆண்டார். பின்னர் 15-ம் நூற்றாண்டில் இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. கி.பி 1520-ல் விஜயநகர நாயக்கர்கள் இதை பாண்டியரிடமிருந்து பிடித்து 200 ஆண்டுகள் ஆண்டனர்.

17-ம் நூற்றாண்டில் மறவர்களும் சேதுபதிகளும் பாண்டிய அரசின் கீழ் இப்பகுதியை ஆண்டனர். 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குடும்பச் சண்டைகளால் இப்பகுதி இராமநாதபுரம், சிவகங்கை என இரண்டாகப் பிரிந்தது. 1730-ல் ஒரு பாளையக்காரர் தஞ்சை அரசரின் உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றி அரசரானார்.

நாயக்கர்கள் பலவீனமாக இருந்த போது, சிவகங்கை அரசரும் இராமநாதபுரம் சேதுபதியும் தங்கள் பகுதிகளை சுதந்திரமாக அறிவித்தனர். பின்னர் கர்நாடக, மராட்டிய, ஹைதராபாத் ஆட்சிகளுக்கு உட்பட்டது.

1795-ல் ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியிடமிருந்து இராமநாதபுரத்தை பிடித்தனர். 1801-ல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன்தாரானார். பின்னர் மருது சகோதரர்கள் ஆட்சி செய்தனர். 1803-ல் அவர்கள் கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்டனர்.

இறுதியில் ஆங்கிலேயர்கள் ஜமீன்தார் முறையை ஒழித்து, மாவட்ட ஆட்சியர் மூலம் நேரடி ஆட்சியை நடத்தினர்.

அமைவிடம்

1910ல் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளை சேர்த்து இராமநாதபுரம் மாவட்டம் உருவானது.திரு. ஜெ. எப். பிரையன்ட் என்பவர் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். ஆங்கிலேயர் காலத்தில் இதை இராம்நாட் என்று அழைத்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இப்பெயரே இருந்தது. பின்னர் தமிழில் இராமநாதபுரம் என மாற்றினர். இதை முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு பாக்கு நீரிணையில் கலப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

1985, மார்ச் 15ல் இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:

சிவகங்கை மாவட்டம் – திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளைக் கொண்டது.

விருதுநகர் மாவட்டம் – திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், இராஜபாளையம் ஆகிய பகுதிகளைக் கொண்டது.

இராமநாதபுரம் மாவட்டம் – திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது.

2018-ல் இராஜசிங்கமங்கலம் என்ற புதிய வட்டம் உருவானது. 2019-ல் கடலாடி, கீழக்கரை, இராஜசிங்கமங்கலம் ஆகிய மூன்று வட்டங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் ஒன்பது வட்டங்கள் ஆயின.

மக்கட் தொகை

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, இந்த மாவட்டத்தில் 13,53 ,445 பேர் வாழ்கின்றனர். இதில்  6,82,658  பேர் ஆண்கள். 670,787 பேர் பெண்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 13.96% அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 983 பெண்கள் என்ற கணக்கில் உள்ளனர். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் சுமார் 330 பேர் வாழ்கின்றனர். மாவட்டத்தில் 80.72% பேர் படித்தவர்கள். ஆறு வயதுக்குள் உள்ள குழந்தைகள் 1,40,644 பேர்.

மொத்தம் படித்தவர்களின் எண்ணிக்கை 9,78,946 இதில் 5,36,487 ஆண்களும், 4,42,459 பெண்களும் உள்ளனர்.

இங்கு வாழும் மக்களில் 77.39% பேர் இந்துக்கள். 6.73% பேர் கிறித்தவர்கள். 15.37% பேர் இசுலாமியர்கள். மற்ற மதத்தினர் 0.50% குறைவாக உள்ளனர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டம், 9 வருவாய் வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டம்

  • இராமநாதபுரம்
  • பரமக்குடி

வருவாய் வட்டங்கள்

  1. இராமநாதபுரம்
  2. இராமேஸ்வரம்
  3. திருவாடனை
  4. கீழக்கரை
  5. இராஜசிங்கமங்கலம்
  6. கடலாடி
  7. கமுதி
  8. முதுகுளத்தூர்
  9. பரமக்குடி

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 4 நகராட்சியும், 7 பேரூராட்சிகளும், 11 ஊராட்சி ஒன்றியகளும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.

நகராட்சிகள்

  • இராமநாதபுரம்
  • இராமேஸ்வரம்
  • கீழக்கரை
  • பரமக்குடி

பேரூராட்சிகள்

  • மண்டபம்
  • சாயல்குடி
  • கமுதி
  • அபிராமம்
  • முதுகுளத்தூர்
  • இராஜசிங்கமங்கலம்
  • தொண்டி

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. மண்டபம்
  2. இராமநாதபுரம்
  3. இராஜசிங்கமங்கலம்
  4. திருப்புல்லாணி
  5. திருவாடனை
  6. போகலூர்
  7. கடலாடி
  8. கமுதி
  9. முதுகுளத்தூர்
  10. நயினார் கோயில்
  11. பரமக்குடி

அரசியல்

இந்த மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 1 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.

சட்டமன்றத் தொகுதி

  1. பரமக்குடி
  2. திருவாடானை
  3. இராமநாதபுரம்
  4. முதுகுளத்தூர்

நாடாளுமன்றத் தொகுதிகள்

போக்குவரத்து

இராமநாதபுரம் தமிழகத்தின் தென்கிழக்கே இருக்கிறது. மதுரையில் இருந்து இராமேசுவரம் வரை 49-ஆம் எண் தேசிய சாலை செல்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து இராமநாதபுரம் வரை வருகிறது. இதே சாலை பாண்டிச்சேரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் செல்கிறது.

இராமநாதபுரத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நாட்டின் பல பெரிய நகரங்களுக்கு ரயில்கள் போகின்றன.

இங்கிருந்து மதுரை விமான நிலையம் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதுதான் இங்கிருந்து மிக அருகில் உள்ள விமான நிலையம்.

இராமநாதபுரம் சுற்றுலா தலங்கள்

இராமநாதசுவாமி கோவில்

Ramanathaswamy Temple
Ramanathaswamy Temple

இராமேஸ்வரம் இந்துக்களின் புனித இடம். இராமர் வழிபட்ட இடம் என்பதால் இது மிகவும் சிறப்பானது. இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் காசிக்கும் இராமேஸ்வரத்துக்கும் செல்வதை பெரும் புண்ணியமாக கருதுகிறார்கள்.

இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்த பிறகு இங்கு வந்தார். இலக்குவன், அனுமன் மற்றும் வானர படை உதவியுடன் கல் பாலம் கட்டி இலங்கை சென்று இராவணனை இராமன் வென்றார் வென்றார் என புராணம் கூறுகிறது.    இராமர் இங்கு சிவனை வணங்கியதால் இது புனித தலமானது. சைவர்களும் வைணவர்களும் இங்கு வழிபடுகிறார்கள். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது நல்லது.

இராமநாதசுவாமி கோவில் மிகவும் அழகானது. நீண்ட தாழ்வாரங்கள், அழகிய தூண்கள், உயரமான கோபுரம் இருக்கிறது. 12-ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் இக்கோவிலைக் கட்டத் தொடங்கினார். பின்னர் அவர் வழித்தோன்றல்கள் கட்டி முடித்தனர்.

கோவிலின் பிரகாரம் ஆசியாவிலேயே மிக நீளமானது. கிழக்கு-மேற்காக 197 மீட்டரும், வடக்கு-தெற்காக 133 மீட்டரும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் 1897-ல் இங்கு வந்து வழிபட்டார். இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் இதுவும் ஒன்று. இங்கு சிவபெருமான் ஜோதி லிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.

திரு உத்திரகோசமங்கை

Uthirakosamangai

தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணு பெருமாளின் ஆதி ஜெகந்நாதர் கோவில் இருக்கிறது. இராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10.2 கி.மீ தூரத்தில் இந்த ஊர் உள்ளது. இராமர் இலங்கைக்கு போக வேண்டி, கடல் கடக்க உதவி கேட்டு கடல் தெய்வத்தை வணங்கினார். அப்போது தர்ப்பைப் புல்லின் மேல் அமர்ந்து தவம் செய்ததால், இந்த ஊருக்கு தர்ப்பசயனம் என்ற பெயர் வந்தது.

பாம்பன் பாலம்

pamban bridge
Pamban Bridge

கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய பாலம் அன்னை இந்திரா பாலம் ஆகும். இது 2.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்தப் பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்பகுதியுடன் இணைக்கிறது. இதை பாம்பன் பாலம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். இதே போல, 2.3 கி.மீ நீளமுள்ள ரயில் பாலமும் இங்கே உள்ளது. இந்த ரயில் பாலத்தின் சிறப்பு என்னவென்றால், கப்பல்கள் செல்வதற்காக இதனை திறந்து மூட முடியும்.

தேவிப்பட்டினம் (நவ பாஷாணம்)

Devipattinam Navagraha Temple
Devipattinam Navagraha Temple

இந்த கடல்கரை ஊருக்கு நவபாஷாணம் என்றும் பெயர் உண்டு. இராமர் இங்கே ஒன்பது கோள்களை வணங்கினார் என்று மக்கள் சொல்கிறார்கள். பக்கத்தில் மகிஷாசுரனை கொன்ற அம்மனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. இங்கே இந்து மக்கள் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்கிறார்கள்.

தனுஸ்கோடி

Dhanushkodi
Dhanushkodi

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனை தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. 1964-ல் வந்த பெரிய புயலில் அங்கு இருந்த கோதண்டராமசுவாமி கோவில் மட்டும் தப்பி, மற்ற எல்லாமே அழிந்துபோனது. இந்தக் கோவில் இராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது. சாலை வழியாக நாம் இக்கோவிலுக்குப் போகலாம். இராவணனின் தம்பி விபீஷணன் இங்கு தான் இராமரிடம் வந்து சரணடைந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

dr apj abdul kalam mani mandapam
Dr APJ Abdul Kalam Mani Mandapam

அப்துல் கலாம் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர். இவர் இராமேஸ்வரத்தில் பிறந்தார். விஞ்ஞானியாக வளர்ந்த அப்துல் கலாம், DRDO மற்றும் ISRO ஆகிய அமைப்புகளில் விண்வெளி பொறியாளராக பணி செய்தார். 2015 ஜூலை 27-ஆம் நாள் ஷில்லாங்கில் திடீரென்று இறந்த அவரை, ஜூலை 30-ஆம் நாள் பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்தனர். இப்போது அந்த இடத்தில் ஒரு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கலாமின் படங்கள், ஓவியங்கள், சில ஏவுகணை மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஏர்வாடி தர்கா

Ervadi Dargah
Ervadi Dargah

ஏர்வாடி தர்கா என்பது குதுபுஸ் சுல்தான் சையத் இப்ராகிம் பாதுசா என்ற புனித இசுலாமியரின் கல்லறை ஆகும். இந்த தர்கா தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் இருக்கிறது. இவரை சையத் இப்ராகிம் ஒலியுல்லா அல்லது சையத் அலி என்றும் அழைப்பார்கள்.

இங்கே மொத்தம் மூன்று தர்காக்கள் உள்ளன. ஒன்றில் சையத்தின் அம்மா பாத்திமாவும், மற்றொன்றில் அவரது மனைவி சையத் அலி பாத்திமாவும், மூன்றாவதில் அவரது மகன் சையத் அபு தாகிரும் உள்ளனர்.

இந்த தர்காவை கட்ட நிலத்தை ராமநாதபுரம் மன்னர் கொடுத்தார். பின்னர் ஆற்காடு நவாப் 1207 ஆம் ஆண்டில் முக்கிய தர்காவை கட்டினார்.

மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் குணம் தரும் இடமாக இந்த தர்கா புகழ் பெற்றுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தினமும் இருமுறை புனித நீரும், பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

சந்தனக்கூடு திருவிழா இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மத மக்களும் பங்கேற்கிறார்கள். ஆசாரியர்கள், யாதவர்கள், ஆதிதிராவிடர்கள், முத்தரையர்கள் என பல சமூக மக்களும் தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள்.

விழாவின் போது, யானைகள், குதிரைகள், மேளதாளம், ஆடல்பாடல், வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதியாக, மார்க்க அறிஞர்கள் பாத்தியா ஓதிய பிறகு சமாதியில் சந்தனம் பூசப்படுகிறது.

இராமநாதபுரம் அரண்மனை

இராமநாதபுரம் நகரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. இதை 17-ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள். அரண்மனையில் பல கட்டிடங்கள் உள்ளன. இராமலிங்க விலாசம் என்ற அரசவை அரங்கம், கௌரி விலாசம் என்ற விருந்தினர் தங்கும் இடம், இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்கு உள்ள இராமலிங்க விலாசத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய அதிகாரி ஜாக்சனுடன் கடுமையாக வாதிட்டார். அதனால் இந்த அரண்மனை நமது விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் இராமநாதபுரம் உள்ளது. சேதுபதி மன்னர்களின் அரண்மனையான இராமலிங்க விலாசத்தில் தொல்லியல் அகழ்வைப்பகம் இயங்கி வருகின்றது.

இரும்பால் செய்த ஆயுதங்களான வேல், கத்தி, குறுவாள், துப்பாக்கி, வளரி ஆகியவை இங்கே உள்ளன. அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த பழைய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுவர்களிலும் மேற்கூரையிலும் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. போர்க் காட்சிகள், கடவுள் படங்கள், இராமாயணக் கதைகள், பாகவதக் கதைகள், இராமர் பிறப்புக் கதை, நீர் விளையாட்டுக் காட்சிகள் ஆகியவை இவற்றில் அடங்கும். ஒவ்வொரு ஓவியத்திற்கும் கீழே பழைய தமிழில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *