பூரணை தினங்களில் முக்கியத்துவம்

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது.

அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும்.

தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது. பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.

சந்திரன் சாப விமோசனம்

சந்திரன் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்தார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாக குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார். எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.

சித்திரகுப்த விரதம்

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன.

பௌர்ணமி விரதங்கள்

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் பட்டியல் இடப்பட்டுள்ளன.

  • சித்ரா பவுர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
  • வைகாசி பவுர்ணமி – முருகனின் பிறந்தநாள்.
  • ஆனிப் பவுர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
  • ஆடிப் பவுர்ணமி – திருமால் வழிபாடு.
  • ஆவணிப் பவுர்ணமி – ஓணம், ரக்சாபந்தனம்.
  • புரட்டாசி பவுர்ணமி – உமாமகேசுவர பூசை.
  • ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்.
  • கார்த்திகைப் பவுர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற   நிகழ்வு.
  • மார்கழிப் பவுர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
  • தைப் பவுர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.
  • மாசிப் பவுர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.
  • பங்குனிப் பவுர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள் பௌத்தமும் பூரணையும்.

பூரணையும் பௌத்தமும்

இலங்கையில் பௌத்தர்களுக்கும் பூரணை புனிதநாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு பூரணையும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். இது அரசு விடுமுறை தினமாக உள்ளது.

இதையும் படிக்கலாம் : சித்ரா பௌர்ணமி சிறப்புகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *