
தென்காசி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்று. இது தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக உருவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி பிரிந்து தனி மாவட்டமானது. இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று அரசு அரசாணை வெளியிட்டது.
தென்காசி மாவட்டம் மேற்கு மலைத் தொடரின் அடியில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்த ஊருக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா வருபவர்கள் நிறைய பேர் இங்கே வருகிறார்கள். இந்த ஊரில் தூறல் மழை அடிக்கடி பெய்யும். இதை மக்கள் சாரல் மழை என்று சொல்வார்கள்.
தென்காசி மாவட்டத்தின் மேற்கில் கேரளாவும், கிழக்கில் தூத்துக்குடியும், வடக்கில் விருதுநகரும், தெற்கில் திருநெல்வேலியும் உள்ளன.
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
பகுதி | பாண்டிய நாடு |
பரப்பளவு | 2882.43 ச.கி.மீ. |
மக்கள்தொகை (2011) | 33,22,644 |
அஞ்சல் குறியீடு | 627 ××× |
தொலைபேசி குறியீடு | 04633 |
வாகனப் பதிவு | TN 76 மற்றும் TN 79 |
- வரலாறு
- புதிய மாவட்டம் உருவாகுதல்
- அமைவிடம்
- மக்கட் தொகை
- கல்வி நிலையங்கள்
- வங்கிகள்
- மாவட்ட வருவாய் நிர்வாகம்
- உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
- தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்
- ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்கள்
- கடையம் ஊராட்சி ஒன்றியங்கள்
- கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
- குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்கள்
- சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள்
- செங்கோட்டை ஊராட்சி ஒன்றியங்கள்
- தென்காசி ஊராட்சி ஒன்றியங்கள்
- வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
- கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியங்கள்
- மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
- அரசியல்
- தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
- வேளாண்மை
- வணிகம்
- காட்டு விலங்குகள்
- அகத்தியமலை
- மலைவளம்
- காட்டு வளங்கள்
- தென் தமிழக பஞ்ச பூதத் தலங்கள்
- போக்குவரத்து
- வானூர்தி நிலையம்
- தென்காசியில் உள்ள கோயில்கள்
- திருமலைக்குமார சுவாமி கோயில் பண்பொழி
- சங்கரநாராயண சுவாமி கோயில், சங்கரன்கோயில்
- குற்றாலநாத சுவாமி கோயில், குற்றாலம்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
- இலஞ்சி குமாரர் கோயில், இலஞ்சி
- சித்திர சபை
- கைலாசநாத சுவாமி கோயில், வீரசிகாமணி
- வில்வநாத சுவாமி கோயில், கடையம்
- பரமகல்யாணி உடனுறை சிவசைலநாத சுவாமி கோயில், சிவசைலம்
- சிந்தாமணிநாத சுவாமி கோயில், வாசுதேவநல்லூர்
- நரசிங்கப் பெருமாள் கோயில், கீழப்பாவூர்
- தென்காசி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
- தேவாலயங்கள்
- பள்ளிவாசல்கள்
- தென்காசி சுற்றுலா தலங்கள்
- தென்காசியில் உள்ள அருவிகள்
- தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள்
- தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்
- புகழ்பெற்ற பிரபலங்கள்
- தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்
வரலாறு
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆண்ட பராகிரம பாண்டியன் என்ற அரசனுக்கு ஒரு நாள் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் இருக்கும் என் பக்தர்கள் வடக்கே உள்ள காசிக்கு நடந்து செல்லும்போது, வழியிலேயே இறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
முற்காலத்தில், சோழர்களின் ஆட்சி முடிந்து பாண்டியர்கள் ஆட்சி வந்தது. தென்காசியை தலைநகராக வைத்து ஆட்சி செய்த அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (1422-1461) இலங்கை மீது பல முறை போர் தொடுத்து வென்றான் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன.
புதிய மாவட்டம் உருவாகுதல்
தென்காசியை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்குவது பற்றி முதலில் 2016-ல் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் பேசினார். பல காலம் இழுபறிக்குப் பின், 2019 ஜூலை 18-ல் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி உருவானது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் பழனிசாமி விதி 110ன் கீழ் இதை அறிவித்தார். பின்னர் புதிய மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அமைவிடம்
இந்த ஊர் 8.97°N 77.3°E என்ற இடத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
மக்கட் தொகை
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 33,22,644 பேர் வாழ்கின்றனர். இதில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 87.7% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 93.04%, பெண்களின் கல்வியறிவு 82.52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகம். தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்.
2011-ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தென்காசியில் இந்துக்கள் 62.26%, முஸ்லிம்கள் 34.79%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01% மற்றும் சமயமில்லாதவர்கள் 0.14% பேர்களும் உள்ளனர்.
கல்வி நிலையங்கள்
பள்ளிகள்
- 872 தொடக்கப் பள்ளிகள்
- 187 நடுநிலைப் பள்ளிகள்
- 80 உயர்நிலைப் பள்ளிகள்
- 153 மேல்நிலைப் பள்ளிகள்
வங்கிகள்
- தமிழ்நாடு கிராம வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இந்தியன் வங்கி
- கனரா வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
- கரூர் வைஸ்யா வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- பேங்க் ஆஃப் பரோடா
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல்வலசை
- ஐ.டி.பி.ஐ வங்கி
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
மாவட்ட வருவாய் நிர்வாகம்
தென்காசி மாவட்டம் 2 வருவாய் கோட்டம், 8 வருவாய் வட்டங்கள், 246 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டம்
- தென்காசி
- சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள்
- தென்காசி
- கடையநல்லூா்
- திருவேங்கடம்
- சங்கரன்கோவில்
- செங்கோட்டை
- வீரகேரளம்புதூர்
- ஆலங்குளம்
- சிவகிரி
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
தென்காசி மாவட்டம் 6 நகராட்சியும், 17 பேரூராட்சிகளும், 10 ஊராட்சி ஒன்றியகளும், 221 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- தென்காசி
- செங்கோட்டை
- கடையநல்லூர்
- புளியங்குடி
- சங்கரன்கோவில்
- சுரண்டை
பேரூராட்சிகள்
- அச்சன்புதூர்
- ஆலங்குளம்
- ஆய்குடி
- குற்றாலம்
- இலஞ்சி
- கீழப்பாவூர்
- மேலகரம்
- பண்பொழி
- புதூர்
- ராயகிரி
- சாம்பவர் வடகரை
- சிவகிரி
- சுந்தரபாண்டியபுரம்
- திருவேங்கடம்
- வடகரை கீழ்பிடாகை
- வாசுதேவநல்லூர்
- ஆழ்வார்குறிச்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்கள்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | அச்சங்குட்டம் | 17. | மேலவீராணம் |
2. | அய்யனரர்குளம் | 18. | மேலமருதப்பபுரம் |
3. | பலபத்திரராமபுரம் | 19. | நல்லூர் |
4. | கடங்கனேரி | 20. | நாரணபுரம் |
5. | காடுவெட்டி | 21. | நெட்டூர் |
6. | கருவந்தா | 22. | நவநீதகிருஷ்ணபுரம் |
7. | காவலாகுறிச்சி | 23. | சிவலார்குளம் |
8. | கீழ்கலங்கள் | 24. | சுப்பையாபுரம் |
9. | கீழவீராணம் | 25. | சீவலபுரம் கரடியுடைப்பு |
10. | கிடாரக்குளம் | 26. | ஊத்துமலை |
11. | குறிச்சான்பட்டி | 27. | வாடியூர் |
12. | குறிப்பன்குளம் | 28. | வ. காவலாகுறிச்சி |
13. | மாறாந்தை | 29. | புதுப்பட்டி |
14. | மருக்காலன்குலம் | 30. | மருதம்புத்தூர் |
15. | மாயமான்குறிச்சி | 31. | ஓடைமறிச்சான் |
16. | மேலக்கலங்கல் | 32. | குத்தபாஞ்சான் |
கடையம் ஊராட்சி ஒன்றியங்கள்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | அடைச்சாணி | 12. | மேலாம்பூர் |
2. | அஞ்சாங்கட்டளை | 13. | முதலியார்பட்டி |
3. | அ.பெ. நாடானூர் | 14. | பாப்பன்குளம் |
4. | தர்மபுரமடம் | 15. | பொட்டல்புதூர் |
5. | கோவிந்தபேரி | 16. | இரவணசமுத்திரம் |
6. | கடையம் | 17. | சேர்வைக்காரன்பட்டி |
7. | கடையம்பெரும்பத்து | 18. | சிவசைலம் |
8. | கீழாம்பூர் | 19. | தெற்குமடத்தூர் |
9. | கீழக்கடையம் | 20. | திருமலையப்பாபுரம் |
10. | மடத்தூர் | 21. | துப்பாக்குடி |
11. | மந்தியூர் | 22. | வெங்கடாம்பட்டி |
23. | வீராசமுத்திரம் |
கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | ஆனைகுளம் | 9. | நயினாரகரம் |
2. | போகநல்லூர் | 10. | நெடுவயல் |
3. | சொக்கம்பட்டி | 11. | பொய்கை |
4. | இடைகால் | 12. | புதுக்குடி |
5. | கம்பனேரி | 13. | புன்னையாபுரம் |
6. | காசிதர்மம் | 14. | திரிகூடபுரம் |
7. | கொடிகுறிச்சி | 15. | ஊர்மேலழகியான் |
8. | குலையனேரி | 16. | வேலாயுதபுரம் |
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்கள்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | ஆ. கரிசல்குளம் | 21. | நாலாந்துலா |
2. | அழகாபுரி | 22. | பழங்கோட்டை |
3. | அப்பனேரி | 23. | பெருங்கோட்டூர் |
4. | அத்திப்பட்டி | 24. | பிள்ளையார்நத்தம் |
5. | அய்யனேரி | 25. | பிச்சைத்தலைவன்பட்டி |
6. | சத்திரகொண்டான் | 26. | புளியங்குளம் |
7. | சத்திரப்பட்டி | 27. | இராமலிங்கபுரம் |
8. | சிதம்பராபுரம் | 28. | சங்குபட்டி |
9. | சித்திரம்பட்டி | 29. | சாயமலை |
10. | இளையரசனேந்தல் | 30. | செவல்குளம் |
11. | கே. ஆலங்குளம் | 31. | தெற்கு குருவிகுளம் |
12. | களப்பாளங்குளம் | 32. | உமையத்தலைவன்பட்டி |
13. | கலிங்கப்பட்டி | 33. | வடக்கு குருவிகுளம் |
14. | காரிசாத்தான் | 34. | வடக்குப்பட்டி |
15. | கே. கரிசல்குளம் | 35. | வாகைகுளம் |
16. | குளக்கட்டாகுறிச்சி | 36. | வரகனூர் |
17. | குருஞ்சாக்குளம் | 37. | வெள்ளாகுளம் |
18. | மைப்பாறை | 38. | வெங்கடாசலபுரம் |
19. | முக்கூட்டுமலை | 39 | ஜமீன்தேவர்குளம் |
20. | நக்கலமுத்தன்பட்டி |
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | அரியநாயகிபுரம் | 15. | பெரும்பத்தூர் |
2. | களப்பாகுளம் | 16. | பொய்கை |
3. | கரிவலம்வந்தநல்லூர் | 17. | புன்னைவனம் |
4. | கீழவீரசிகாமணி | 18. | ராமநாதபுரம் |
5. | குவளைக்கண்ணி | 19. | சென்னிகுளம் |
6. | மடத்துபட்டி | 20. | செந்தட்டியாபுரம் |
7. | மணலூர் | 21. | சுப்லாபுரம் |
8. | மாங்குடி | 22. | திருவேட்டநல்லூர் |
9. | நொச்சிகுளம் | 23. | தெற்கு சங்கரன்கோவில் |
10. | பனையூர் | 24. | வடக்குப்புதூர் |
11. | பந்தப்புளி | 25. | வாடிக்கோட்டை |
12. | பருவக்குடி | 26. | வயலி |
13. | பெரியூர் | 27. | வீரசிகாமணி |
14. | பெருமாள்பட்டி | 28. | வீரீருப்பு |
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியங்கள்
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | இளதூர் |
2. | கற்குடி |
3. | கிளங்காடு |
4. | புளியரை |
5. | சீவநல்லூர் |
6. | தெற்குமேடு |
தென்காசி ஊராட்சி ஒன்றியங்கள்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | ஆயிரபேரி | 8. | பெரியபிள்ளைவலசை |
2. | கணக்கபிள்ளைவலசை | 9. | பிரானூர் |
3. | காசிமேஜர்புரம் | 10. | சில்லரைபுரவு |
4. | குத்துக்கல்வலசை | 11. | சுமைதீர்ந்தபுரம் |
5. | மத்தளம்பாறை | 12. | தேன்பொத்தை |
6. | பாட்டாக்குறிச்சி | 13. | திருச்சிற்றம்பலம் |
7. | பாட்டப்பத்து | 14. | வல்லம் |
வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | அரியூர் | 12. | நெல்கட்டும்செவல் |
2. | தேவிபட்டணம் | 13. | இராமநாதபுரம் |
3. | தாருகாபுரம் | 14. | ராமசாமியாபுரம் |
4. | துரைச்சாமியாபுரம் | 15. | சங்கனாப்பேரி |
5. | கூடலூர் | 16. | சங்குபுரம் |
6. | இனாம்கோவில்பட்டி | 17. | சுப்பிரமணியபுரம் |
7. | கோட்டையூர் | 18. | தலைவன்கோட்டை |
8. | மலையடிக்குறிச்சி | 19. | தென்மலை |
9. | முள்ளிக்குளம் | 20. | திருமலாபுரம் |
10. | நகரம் | 21. | உள்ளார் தளவாய்புரம் |
11. | நாரணபுரம் | 22. | விஸ்வநாதப்பேரி |
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியங்கள்
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | ஆண்டிபட்டி | 12. | மேலப்பாவூர் |
2. | அரியப்பபுரம் | 13. | நாகல்குளம் |
3. | ஆவுடையானூர் | 14. | பெத்தநாடார்பட்டி |
4. | குணராமனல்லூர் | 15. | பூலங்குளம் |
5. | இடயர்தவனை | 16. | ராஜகோபாலபேரி |
6. | இனாம்வெள்ளகால் | 17. | ராஜபாண்டி |
7. | கல்லூரணி | 18. | சிவநாடானூர் |
8. | கழுநீர்குளம் | 19. | திப்பணம்பட்டி |
9. | கீழவெள்ளகால் | 20. | சி.துத்திகுளம் |
10. | குலசேகரபட்டி | 21. | வீரகேரளம்புதூர் |
11. | மேலகிருஷ்ணாபேரி |
மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியங்கள்
மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 கிராம ஊராட்சிகளின் பட்டியல் பற்றி கீழே பார்க்கலாம்.
1. | சின்னகோவிலான்குளம் | 11. | பட்டாடைகட்டி |
2. | ஈச்சந்தா | 12. | பெரியகோவிலான்குளம் |
3. | இலந்தக்குளம் | 13. | சேர்ந்தமரம் கஸ்பா |
4. | கீழநீலிதநல்லூர் | 14. | சேர்ந்தமரம் மஜரா |
5. | கோ. மருதப்பபுரம் | 15. | வடக்குபனவடலி |
6. | குலசேகரமங்கலம் | 16. | வெள்ளாளன்குளம் |
7. | குருக்கள்பட்டி | 17. | மகேந்திரவாடி |
8. | மேலநீலிதநல்லூர் | 18. | மருதங்கிணறு |
9. | நடுவக்குறிச்சி மேஜர் | 19. | உசிலங்குளம் |
10. | நடுவக்குறிச்சி மைனர் | 20. | மலையாங்குளம் |
அரசியல்
தென்காசி மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 1 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.
சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிகள்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
தென்காசி அரசு மருத்துவமனை 1986-ல் பொது மக்களுக்காக திறக்கப்பட்டது. இங்கு பல வகையான மருத்துவ பிரிவுகள் உள்ளன. நாள்தோறும் 1500 முதல் 2000 நோயாளிகள் வெளியே இருந்து வந்து சிகிச்சை பெறுகிறார்கள். மருத்துவமனையில் 337 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.
வேளாண்மை
சங்கரன்கோயில் பகுதியில் பருத்தியும் மிளகாயும் நிறைய விளைகின்றன. இந்த மாவட்டத்தில் விளையும் நெல் வகைகளில் ஆனைக் கொம்பன் நெல் முக்கியமானது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி மிகுதியாக விளைந்தது. ஆனால் இப்போது குறைவாகவே பயிரிடுகிறார்கள். தென்காசி பகுதியில் உளுந்தும் சோளமும் விளைகிறது. சங்கரன்கோயில் பகுதியில் மிளகாயும், தென்காசி பகுதியில் மிளகும் விளைகிறது. இங்கே மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை ஆண்டு முழுவதும் இங்குக் கிடைக்கும்.
வணிகம்
தென்காசியில் வணிகம் நன்றாக வளர்ந்துள்ளது. ஆனால் இங்கு பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. பழைய காலம் முதலே புகழ்பெற்ற துணிக் கடைகள் பல உள்ளன. இப்போது புதிதாக வந்துள்ள உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா விதமான வியாபாரமும் நடக்கிறது.
காட்டு விலங்குகள்
செங்கோட்டை காடுகளில் யானைகளும், காட்டு எருமைகளும் இன்னும் பல வகையான விலங்குகள் வாழ்கின்றன. சங்கரன் கோவில் பகுதியில் காட்டு எருதுகள் காணப்படுகின்றன. மேற்கு மலைத் தொடரில் எல்லா இடங்களிலும் புலிகள் உள்ளன. சிறுத்தைகள் குறைவாகவே காணப்படுகின்றன. தேனுண்ணும் கரடிகள் நிறைய உள்ளன. குற்றாலம் பகுதியில் சாம்பர் மான்களும், மலையாடுகளும் வாழ்கின்றன. எலிமான்களைப் பார்ப்பது கடினம். மறிமான்கள் மான் போலவே இருக்கும். காட்டு நரிகள், நீண்ட வால் உள்ள குரங்குகளும் கூட இங்கே காணப்படுகின்றன.
அகத்தியமலை
பொதிகை மலை என்பது அகத்தியமலை தான். இது 1800 மீட்டர் உயரம் கொண்டது. தாமிரபரணி நதி இந்த மலையில் தான் உற்பத்தியாகிறது. அகத்தியமலையின் உச்சி பல சிறு மலை முகடுகளால் சூழப்பட்டு காட்சி தருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இந்த மலைக்கு நல்ல பயனைத் தருகிறது.
மலைவளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை நீண்டு செல்கிறது. சிவகிரி மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இந்த மலை உச்சிகளின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.
காட்டு வளங்கள்
தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் பல வகையான மரங்கள் உள்ளன. செங்கோட்டை காடுகளில் ரயில் தண்டவாளத்துக்குத் தேவையான மர கட்டைகள் கிடைக்கின்றன. அம்பாசமுத்திரம் காடுகளில் மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் இருக்கிறது. காகிதம் தயாரிக்க உதவும் ஈடா ரீட் மரங்கள் செங்கோட்டை காடுகளில் நிறைய உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10,000 டன் அளவுக்கு இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றோடு பிசின் மரம், மஞ்சக்கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மரங்களும் நிறைய வளர்கின்றன.
தென் தமிழக பஞ்ச பூதத் தலங்கள்
பஞ்ச பூதங்கள் |
ஊர் | சுவாமி |
அம்பாள் |
நிலம் | சங்கரன்கோவில் | சங்கரலிங்கப்பெருமான் | கோமதியம்பாள் |
நீர் | தாருகாபுரம் | மத்யஸ்தநாதர் | அகிலாண்டேசுவரி |
நெருப்பு | கரிவலம்வந்தநல்லூர் | பால்வண்ணநாதர் | ஒப்பனையம்பாள் |
காற்று | தென்மலை | திரிபுரநாதர் | சிவபரிபூரணாம்பிகை |
ஆகாயம் | தேவதானம் | நச்சாடைதவிர்த்து அருளிய நாதர் | தவம்பெற்றநாயகி |
போக்குவரத்து
தென்காசியில் இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. ஒன்று தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் மற்றொன்று அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம்.
வானூர்தி நிலையம்
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 97.3 கி.மீ. அல்லது மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 160 கி.மீ.
தென்காசியில் உள்ள கோயில்கள்
திருமலைக்குமார சுவாமி கோயில் பண்பொழி

கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள மேற்குமலைத் தொடரின் சிறிய குன்றில், திருமலைக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ தொலைவில் திருமலைக்கோவில் அமைந்துள்ளது. இது பண்பொழி என்ற இடத்தில் உள்ள முருகன் கோவில் ஆகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த வேளிர் குலத்தில் ஒருவரான ஆய்அண்டிரன் என்பவர் ஆட்சி செய்தார். அவர் ஆண்ட பகுதியில் உள்ள மலை கவிரமலை என்று அழைக்கப்பட்டது. இந்த புனித தலத்தைப் பற்றி அருணகிரிநாதர் தனது பாடல்களில் பாடியுள்ளார்.
இந்த கோயிலில் இருக்கும் முருகப்பெருமானை ‘திருமலை முருகன் அல்லது திருமலை முத்துகுமாரசுவாமி என்று அழைக்கிறார்கள். இதனால், இங்கு வாழும் பல மக்களுக்கு திருமலை என்ற பெயர் வைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் திருமலை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த மலைக் கோயிலைச் சுற்றி தென்னை மரங்களும் சிறு கிராமங்களும் உள்ளன. மலை மேல் நின்று பார்த்தால் அழகான காட்சிகளைக் காணலாம்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது வர வேண்டும். முருகனுக்கு உரிய நட்சத்திர நாட்களான விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நாட்களில் இந்த மலையில் சில சிறப்பு மூலிகைகள் வளர்ந்தன. அவை ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகியவை. பண்டைய காலத்தில் செல்வம் பெருக வேண்டி, திருமலைச் செடியின் வேரையும் தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து பூஜை செய்தார்கள். ஆனால் இப்போது இந்த மூலிகைகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ‘வி’ என்றால் ‘உயர்ந்த’ என்றும், ‘சாகம்’ என்றால் ‘ஒளி’ என்றும் பொருள். விசாக நட்சத்திரத்தில் மூன்று வகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. அவை விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் ஆகும். இந்த கிரணங்கள் அனைத்தும் இந்த மலை மீது விழுவதால், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு வந்து வழிபடலாம் என்பது பழைய நம்பிக்கை.
சங்கரநாராயண சுவாமி கோயில், சங்கரன்கோயில்

சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தரும் சிறப்பான கோயில் இது. இது சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இந்தக் கோயில் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை – மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய நாட்களில் – காலை சூரியனின் ஒளி நேராக சங்கரலிங்க சுவாமி மீது விழும்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. இது பழங்கால கட்டிடக் கலையின் அற்புதமான சாதனை ஆகும். இந்தக் கோயில் தென்பாண்டி நாட்டின் ஐந்து பூதத் தலங்களில் மண் தலமாக விளங்குகிறது. ஆடி மாதத்தில் நடைபெறும் கோமதி அம்மனின் தவக்காட்சி (ஆடித்தபசு) பல லட்சம் பக்தர்களை ஈர்க்கிறது.
பாம்பாட்டி சித்தர் இந்த ஊரில் வாழ்ந்தார். அம்மனின் பெருமைகளை உலகறியச் செய்தார். அவர் சமாதி கோயிலுக்கு பக்கத்திலேயே இருக்கிறது.
கோவிலுக்குள் அம்மன் சந்நிதியைச் சுற்றி உள்ள வழியில் ஒரு பாம்பு புற்று இருக்கிறது. இதை வன்மீகம் என்று சொல்கிறார்கள். இந்தப் புற்றில் இருந்து மண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டால் நோய்கள் போய்விடும் என்று நம்புகிறார்கள்.
குற்றாலநாத சுவாமி கோயில், குற்றாலம்

குற்றாலத்தில் உள்ள திருகுற்றாலநாதர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. தேவாரம் பாடிய சம்பந்தரும் சுந்தரரும் இக்கோயிலைப் பற்றிப் பாடியுள்ளனர். இக்கோயில் பாண்டிய நாட்டின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்று. இது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஇத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் அதை சிவலிங்கமாக மாற்றினார் என மக்கள் நம்புகின்றனர். அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடல்கள் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில், சித்திர சபை என்ற சிறப்பு மண்டபம் இங்கு உள்ளது.
இந்தக் கோயில் மற்ற கோயில்களைப் போல சதுரமாகவோ நீண்டசதுரமாகவோ இல்லை. சங்கின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது இக்கோயிலின் சிறப்பு. குற்றாலநாதர் கோயிலில் உள்ள இறைவன் பெயர் – குற்றாலநாதர் (திரிகூடநாதர்) இறைவியின் பெயர் – குழல்வாய் மொழியம்மை.
திருக்குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயில். கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் இங்கு வருகிறார்கள். ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு இளமழை (சாரல்) பொழிகிறது. தமிழகத்தின் தென்றல் காற்று இந்த மலையில் தான் தோன்றுகிறது. இங்குள்ள மலைக்கு திரிகூட மலை என்று பெயர். ஏனென்றால் அது மூன்று சிகரங்களைக் கொண்டது. மலை அடிவாரத்தில் கோயிலும் அருவியும் இருக்கிறது. அங்கே பிள்ளையார், லிங்கம், கோபுரம், மலை, அருவி என ஐந்து முக்கிய காட்சிகளைப் பார்க்கலாம். இந்த மலையில் மூன்று உச்சிகள் இருப்பதால் இதை திரிகூட மலை என்று சொல்கிறார்கள். கடவுள் மலை அடியில் இருப்பதால் அவரை திரிகூடநாதர் என்று அழைக்கிறார்கள். இந்த ஊர் கடல் மட்டத்தில் இருந்து 550 அடி உயரத்தில் இருக்கிறது. மலையின் உயரம் 5000 அடி.
இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு சித்ராநதி என்று பெயர். திருக்குற்றாலத்தில் உள்ள அருவி மிகவும் பிரசித்தமானது. மலையில் மேலே இருந்து மூன்று இடங்களில் அருவி விழுகிறது. முதல் அருவி 100 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. இதற்கு தேனருவி என்று பெயர். அடுத்து 30 அடி உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு செண்பகாதேவி அருவி என்று பெயர். கடைசியாக 288 அடி உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு பொங்குமாக்கடல் என்று பெயர்.
மலை உச்சியில் வளரும் மூலிகைகள் கலந்து வரும் அருவி நீரில் குளிப்பது உடலுக்கு நல்லது. அதனால் பலரும் இங்கு வந்து குளிக்க விரும்புகின்றனர். பாதுகாப்பாக குளிப்பதற்கான வசதிகள் இங்கு உள்ளன. குற்றாலத்தில் ஐந்து பிரிவாக விழும் நீர்வீழ்ச்சியை ஐந்தருவி என்று அழைக்கிறார்கள். இங்கும் மக்கள் பாதுகாப்பாக குளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குற்றாலத்தில் இருந்து கிழக்கே1 கி.மீ தொலைவில் புலி அருவி உள்ளது. இதுவும் குளிப்பதற்கு நல்ல இடம் ஆகும்.
திருக்குற்றாலம் சிவத்தலமாக விளங்குவதோடு உடல் நலத்தைக் காக்கும் ஆரோக்கியத் தலமாகவும் உள்ளது. இந்த ஊர் மேற்கு மலைத் தொடரில் ஆரியன்காவு கணவாய் அருகே உள்ளது. அதனால் தென்மேற்கு பருவக் காற்றும் மழையும் இங்கே வந்து குளிர்ச்சியைத் தருகிறது.
வைகாசி முதல் ஆவணி வரை உள்ள நான்கு மாதங்களில் இங்கே மெல்லிய மழையும் இதமான காற்றும் வீசும். இதை சாரற்பருவம் என்பார்கள். இந்த காலத்தில் குற்றாலம் திருவிழா போல காட்சி தரும். நிறைய மக்கள் இங்கே வந்து அருவியில் குளிப்பார்கள்.
சாரற் காலத்தில் இங்கே குளிப்பதால் தோல் நோய்கள் போகும். மூளை நோய் குணமாகும். பசி கூடும். உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். இப்படி சிறப்பான இயற்கை அழகு நிறைந்த இடத்தில், பேரருவியின் அருகில் இந்த சிவன் கோயில் இருக்கிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்று. இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. வடக்கே உள்ள காசிக்குப் போக முடியாத மக்களுக்காக, தெற்கே இந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது. அதனால் தான் இந்த ஊருக்கு தென்காசி என்று பெயர் வந்தது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.
இக்கோயிலை முதலில் பாண்டிய அரசன் பராக்கிரம பாண்டியன் கட்டத் தொடங்கினார். பின்னர் குலசேகர பாண்டியன் கோயிலின் கட்டுமான வேலைகளை முடித்தார். கோயிலின் நுழைவு வாயிலான ராஜகோபுரம் 175 அடி உயரமும், ஒன்பது நிலைகள் உயர்ந்து நிற்கும் கோபுரமும், பதினொரு அழகிய தூண்களைக் கொண்ட தென்காசி கோயில். கோயிலின் நுழைவு வாயிலில் எப்போதும் குளிர்ந்த காற்று வீசுகிறது. பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 மடங்களையும் சேர்த்துக் கட்டினார்.
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. நந்தி தேவர் பிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது. சிலாகித முனிவருக்கு குழந்தை பாக்கியம் இங்கு கிடைத்ததாக கோயில் வரலாறு சொல்கிறது. கோயிலைக் கட்டிய பராக்கிரம பாண்டியனின் உற்சவர் சிலை சுவாமி சன்னதியில் இருக்கிறது. கோயில் விழாக்களில் அந்த மன்னனை முதன்மையானவராக கருதி, முதல் மரியாதை அவருக்கே செய்யும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
இலஞ்சி குமாரர் கோயில், இலஞ்சி

இலஞ்சி என்ற ஊரில் முருகப்பெருமானுக்கு ஒரு கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு இலஞ்சி குமாரர் கோயில் என்று பெயர். இது தமிழ்நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கிறது. குற்றாலத்திலிருந்து சுமார் 4.4 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் அமைத்துள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன் இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். அருணகிரிநாதர் இக்கோயிலைப் பற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.
சித்திர சபை

தமிழ்நாட்டில் நடராஜர் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்று சித்திர சபை. இந்த சபையில் மூலிகை நிறங்களால் வரையப்பட்ட நடராஜர் ஓவியம், திருக்குற்றாலக் கோயிலின் வரலாறு, முருகனின் 16 தோற்றங்கள், விநாயகரின் 15 தோற்றங்கள் ஆகிய பழைய ஓவியங்கள் உள்ளன. 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பராக்கிரமபாண்டியன் இந்த சபையை கட்டினார்.
கைலாசநாத சுவாமி கோயில், வீரசிகாமணி
பழங்காலத்தில், 6-ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் மலையைக் குடைந்து கோயில் ஒன்றை உருவாக்கினர். இது கற்றளிகள் கட்டப்படத் தொடங்கிய காலத்தின் முதல் கட்டமாகும். இக்கோயிலில் உள்ள விநாயகர் சிலை தமிழகத்தில் காணப்படும் மிகப் பழைய விநாயகர் சிலைகளில் ஒன்று ஆகும்.
வில்வநாத சுவாமி கோயில், கடையம்
மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில், வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள அழகான கோயில் இது. மகாகவி பாரதியார் காணிநிலம் வேண்டும் என்று தாய் பராசக்தியிடம் வேண்டி பாடிய புனித இடம்.
பரமகல்யாணி உடனுறை சிவசைலநாத சுவாமி கோயில், சிவசைலம்
மேற்கே பார்த்து இருக்கும் சிவாலயம். நாலு பக்கமும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பெற்ற ஜடாமுடி தரித்த சிவலிங்கம். நான்கு கைகளுடன் காட்சி தரும் மூலவர் அம்மன் பரமகல்யாணி. சிற்ப வேலையின் வல்லுநர் மயனால் செய்த அழகான நந்தி.
சிந்தாமணிநாத சுவாமி கோயில், வாசுதேவநல்லூர்
14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் சிந்தாமணிநாத சுவாமி கோயில். இங்குள்ள சிவபெருமான் வழக்கமான லிங்க வடிவில் இல்லாமல், பார்வதி தேவியுடன் இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவில் காட்சி தருகிறார். தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு அடுத்தபடியாக மூலவர் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவனைக் காணக்கூடிய கோயில் இதுவாகும்.
நரசிங்கப் பெருமாள் கோயில், கீழப்பாவூர்
10-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. இங்குள்ள மூலவர் 16 திருக்கரங்களுடன், இரணியனை அழித்த நிலையில் காட்சி தருகிறார்.அசுரனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் அரக்கனின் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் அட்டகாசக் காட்சி தருகிறார் இந்த நரசிம்மர். நரசிம்மருக்கு அருகில் பிரகலாதன், அவனுடைய தாய் லீலாவதி, காசி மன்னன் மற்றும் காசிப முனிவர் காட்சியளிக்கின்றனர். தலைக்குமேல் வெண்குடை, சாமரங்கள் உள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
- புளியங்குடி நரசிங்க பெருமாள் கோயில்
- புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில்
- மேல முத்தார அம்மன் கோயில்
- திருவிலஞ்சி பெருமான் கோவில்
- ஆய்க்குடி பாலசுப்பிரமணி திருக்கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
- தென்காசி ஸையது சுலைமான் தர்கா
- பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா
- கடையம் தோரணமலை முருகன் கோவில்
- கம்பிளி கிராமம் மகாலிங்க மலை சிவன் கோவில்
- ஆய்க்குடி சிவன் கோவில்
- ஆய்க்குடி ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில்
- மேல சங்கரன் கோவில், தென்காசி
- கிழ சங்கரன் கோவில், தென்காசி
- சுடலை மாடசுவாமி கோவில், ஆசாத் நகர்
- தோரணமலை முருகன் கோவில், கடையம்
- திரிபுர சுந்தரி அம்மன் கோவில்
- பழனி ஆண்டவர் கோவில், யானைப்பாலம்
- ஓப்பனை பிள்ளையார் கோவில்
- விண்ணகரப்பெருமாள் கோவில்
- பொருந்திநின்ற பெருமாள் கோவில்
- வண்டிமலைச்சி அம்மன் கோவில்
- முத்தழகி அம்மன் திருக்கோவில்
- ஆனைமலை அய்யனார் கோவில்
- புன்னையாபுரம் கற்பக நாச்சியார் அம்மன் கோவில்
- முப்புடாதி அம்மன் திருக்கோவில், கடையநல்லூர்
- கம்பிளி கிராமம் சூரியகாந்தி தோட்டம் (குற்றால சீசன் காலங்களில்)
- அணைக்கரை விநாயகர் கோவில்
- சிதம்பரேஷ்வரர் கோவில்
- குல சேகர நாதர் கோவில்
- வரணகுனநாதர் கோவில்
தேவாலயங்கள்
தென்காசியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் அப்பகுதியின் முக்கிய கத்தோலிக்க ஆலயம் ஆகும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள். கேரளாவில் இருந்து நிறைய பக்தர்கள் வருவதால், மலையாள மொழியிலும் வழிபாடு நடத்தப்படுகிறது. மற்ற மத மக்கள் இதனை சர்வேசுவரன் கோவில் என்று அழைக்கிறார்கள்.
பள்ளிவாசல்கள்
- வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்
- புதுமனை – சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
- செய்யது சுலைமான் பிர்ஜதே ஜூம் ஆ பள்ளிவாசல்
- தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்
- ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்
- இஸ்மாயீல் மீயான் ஜும்மா பள்ளிவாசல்
- நடுபேட்டை ஜூம் ஆ பள்ளிவாசல்
- பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
- மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்
- ராஜ் மீயான் ஜூம் ஆ பள்ளிவாசல்
- ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்
- ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்
- ஜமாலியா நகர் ஜும்மா பள்ளி வாசல்
- மாலிக்நகர் ஜும்மா பள்ளி வாசல்
- மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல்
- முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல் அப்துல் கலாம் நகர்
- ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்
தென்காசி சுற்றுலா தலங்கள்
- குற்றாலம்
- ராமநதி அணை
- உலக அம்மன் கோவில்
- ஐந்தருவி
- புலியருவி
- பழைய குற்றாலம்
- குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை)
- திருமலைக் கோவில்
- அடவிநயினார் நீர்த்தேக்கம்
- அச்சன்கோவில் (கேரள மாநிலம்)
- கருப்பாநதி அணைக்கட்டு
- கடனாநதி அணைக்கட்டு
- செண்பகதேவி அருவி
- பாலருவி
- தோட்டக்கலை துறை பூங்கா – ஐந்தருவி
- படகு குழாம்-குற்றாலம்
- திருமலை குமார சுவாமி கோவில் – பண்பொழி
தென்காசியில் உள்ள அருவிகள்
குற்றாலம்

குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 520 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகள் இந்த மலையில் தான் பிறக்கின்றன.
குற்றாலம் நகரத்தின் மக்கள் தொகை சுமார் 2,368 பேர் வாழ்கின்றனர். ஏழை மக்களும் சுலபமாக சுற்றுலா செல்ல முடிவதால், இதை ஏழைகளின் சொர்க்கம் என்று சொல்வார்கள். ஜூன் முதல் செப்டம்பர் வரையும், அக்டோபர் முதல் ஜனவரி வரையும் குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல நல்ல நேரம். இந்த காலத்தில் மழை நன்றாக பெய்வதால் அருவிகளில் தண்ணீர் நிறைய இருக்கும்.
பழங்காலத்து சங்க இலக்கியங்களிலும் குற்றாலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அருவியில் குளிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடங்கள் உள்ளன. பல தங்கும் விடுதிகளும் உள்ளன. இங்கு தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும். அருகில் உள்ள தென்காசியிலும் தங்க முடியும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, பாலருவி ஆகியவை முக்கியமானவை. குண்டாறு அணைக்கு அருகிலும் பல அருவிகள் உள்ளன. வனப்பகுதிக்குள் உள்ள அருவிகளை வனத்துறை கட்டுப்பாட்டில் வருகின்றன.
சுற்றுலா வருபவர்கள் அருவிகளில் எந்த நேரமும் குளிக்க வசதிளை தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேன் அருவி, செண்பகாதேவி அருவி தவிர மற்ற எல்லா அருவிகளிலும் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இந்த மலையில் வளரும் மூலிகைச் செடிகள் நோய் தீர்க்கும் தன்மை கொண்டவை. மூட்டு வலி, நாள்பட்ட தலைவலி, நரம்பு தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் குற்றாலத்தில் சிறிது காலம் தங்கினால் குணம் பெறலாம் என்று நம்புகிறார்கள்.
மெயின் அருவி

பேருந்து நிலையத்துக்கு மிக பக்கத்திலேயே மெயின் அருவி அல்லது பிரதான அருவி இருக்கிறது. இந்த அருவி 50 மீட்டர் அளவுக்கு அகலமாகவும், 300 அடிக்கு மேல் உயரமாகவும் இருக்கிறது. இதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். குற்றாலநாதர் கோயில் பக்கத்திலேயே இந்த அருவி இருக்கிறது. கோயில் பக்கத்தில் கார், பைக் நிறுத்த இடமும் இருக்கிறது. குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி தான் இந்த அருவியை பராமரிக்கிறது. சுற்றுலா வருபவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் இங்கே இருக்கிறது. அருவிக்கு போகும் வழி முழுவதும் கடைகள் இருக்கின்றன. குற்றாலம் சீசன் நேரத்தில் இந்த கடைகள் இரவு பகல் எல்லா நேரமும் திறந்திருக்கும்.
ஐந்தருவி

இந்த அருவி அதன் பெயருக்கு ஏற்றபடி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து விழுகிறது. இதைப் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த அருவி பிரதான அருவியில் இருந்தோ அல்லது பேருந்து நிலையத்தில் இருந்தோ 4 கி.மீ தொலைவில் இருக்கிறது. மேற்கு மலைத் தொடரின் உள்ளே வளைவு நெளிவாகச் செல்லும் சாலையில் போக வேண்டும். சாலை நன்றாக அமைந்துள்ளது. இது சுற்றுச்சூழல் பூங்காவுக்கு அருகில் இருப்பதால், குற்றாலம் வரும் எல்லா சுற்றுலாப் பயணிகளும் இந்த அருவிக்கும் வருகிறார்கள்.
பழத்தோட்ட அருவி

ஐந்தருவிக்கு அருகில் பழத்தோட்ட அருவி உள்ளது. இந்த அருவி காட்டுப் பகுதிக்குள் இருப்பதால் எல்லோரும் போக முடியாது. முன்பு சிறப்பு அனுமதி பெற்று மட்டுமே போக முடிந்தது. ஆனால் இப்போது அந்த அனுமதியும் இல்லை.
இந்த அருவி ஐந்தருவியின் மேல் பகுதியில் விழுகிறது. சுற்றிலும் அடர்ந்த காடும், பழ மரங்களும் இருப்பதால் இதற்கு பழத்தோட்ட அருவி என்று பெயர் வந்தது. அருவிக்குப் போகும் வழி அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது. அதனால் பாதுகாப்புக்காக இப்போது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
சிற்றருவி

சிற்றருவி வனப்பகுதியில் இருக்கிறது. வனத்துறை ஊழியர்கள் இதைப் பராமரித்து வருகின்றனர். மக்கள் பார்வைக்காக 2019 ஜூலை 19 முதல் திறந்து விடப்பட்டுள்ளது. காட்டுக்குள் இருப்பதால், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பிரதான அருவிக்கு மிக அருகில் இது உள்ளது. பிரதான அருவியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து வரலாம். இது மிகச்சிறிய அருவி. அதனால் குறைவான மக்களே இங்கு வருவார்கள். பாதுகாப்பாகவும் சிறியதாகவும் இருப்பதால் குழந்தைகள் இங்கு மகிழ்ச்சியாக குளிக்கிறார்கள்.
தேனருவி

தேனருவி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த அருவிக்கு போக வேண்டுமென்றால் செண்பகாதேவி அருவியைத் தாண்டி போக வேண்டும். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இந்த அருவி இருக்கிறது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மலை ஏற்றம் பயிற்சி உடையவர்கள் மட்டுமே இந்த அருவிக்குப் போக முடியும். வழியில் தேன்கூடுகள் நிறைய இருப்பதால் இதற்கு தேனருவி என்று பெயர் வந்தது. இது சிறிய அருவி என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்போது சுற்றுலா பயணிகள் இங்கே வர அனுமதி இல்லை.
செண்பகாதேவி அருவி

செண்பகாதேவி கோயிலுக்கு அருகில் இந்த அருவி உள்ளது. குற்றாலநாதர் கோயில் திருவிழா தொடங்கும் போது, முதலில் இந்தக் கோயிலில் இருந்து தான் விழா ஆரம்பமாகிறது. அதனால் தான் இந்த அருவிக்கு செண்பகாதேவி அருவி என்று பெயர் வந்தது. இந்த அருவி முழுவதும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காட்டு விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், சுற்றுலா பயணிகள் இங்கே வர அனுமதி இல்லை. காட்டின் நுழைவு வாயிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த அருவி இருக்கிறது.
புலியருவி

பழைய குற்றாலம் போகும் வழியில் புலியருவி இருக்கிறது. இது பிரதான அருவியில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த அருவியில், மழை பெய்யும் நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும். பாதுகாப்பான இடம் என்பதால், சுற்றுலா பயணிகள் இங்கு வரலாம்.
பழைய குற்றாலம்

பிரதான அருவியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அம்பை வழியில் பழைய குற்றாலம் அருவி இருக்கிறது. இந்த வழியில் அழகான மலைகளும், பசுமையான மரங்களும், விரிந்த வயல்களும் இருக்கின்றன. இதனால் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய குற்றாலத்தில் சிறுவர்கள் நீந்தி விளையாட 2 குளங்கள் உள்ளன. அதனால் குழந்தைகள் அங்கு போய் மகிழ்ச்சியாக குளிக்கிறார்கள். இந்த அருவியை வனத்துறை பராமரித்து வருகிறது. கார்கள் நிறுத்த இடம் உள்ளது. அருவியைச் சுற்றி பல கடைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கடைகள் உள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள்
அடவிநயினார் அணை

அடவிநயினார் அணை செங்கோட்டை தாலுகாவில் உள்ள மேக்கரை கிராமத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது. குற்றாலம், அச்சன்கோவில் ஆகிய இடங்களுக்கு அருகில் இந்த அணை அமைந்துள்ளது. மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அணைக்கும் வருகிறார்கள். இங்கே ஒரு சிறிய அருவியும் உள்ளது.
கடனாநதி அணை

சிவசைலம் கிராமத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இந்த அணை இருக்கிறது. தற்போது இந்த அணைக்கட்டு பகுதிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குற்றாலம் மழைக்காலத்திலும், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் நேரத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.
குண்டாறு அணை

குற்றாலம், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் குண்டாறு அணை இருக்கிறது. இந்த அணைக்கு நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இங்கே வானிலை மிகவும் நன்றாக இருக்கும். மேற்கு மலைத் தொடரில் இருந்து1 கி.மீ தொலைவில் இந்த அணை உள்ளது. இங்கே அழகான அருவி ஒன்று அமைந்துள்ளது. இந்த அருவிக்குச் செல்ல கார் அல்லது ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் செல்லலாம்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்
- சிற்றாறு
- குண்டாறு நதி
- ஹரிஹர நதி
- கல்லாறு
- நிட்சேபநதி
- அனுமன் நதி
- வாழைமலை ஆறு
- கோட்டைமலை ஆறு
- தாம்பராபரணி ஆறு
- மணிமுத்தாறு
- பச்சையாறு
- ஐந்தருவி ஆறு
புகழ்பெற்ற பிரபலங்கள்
- பூலித்தேவன்
- வாஞ்சிநாதன்
- திரிகூடராசப்பர்
- ரசிகமணி டி. கே. சி
- சட்டநாத கரையாளர்
- ஒண்டிவீரன்
- வெண்ணிக் காலாடியார்
- சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப)
தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்
குற்றாலம்
குற்றாலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா இடம். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கே குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல அருவிகள் உள்ளன. இந்த அருவி நீரில் குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. குற்றால மலையில் 2,000-க்கும் மேல் மூலிகைச் செடிகள் உள்ளன. மழை நீர் இந்த மூலிகைச் செடிகள் மேல் விழுந்து அருவியாக வருவதால், அந்த நீரில் மூலிகைகளின் நன்மைகள் கலந்திருக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நிறைய மக்கள் இங்கே குளிக்க வருவார்கள். சில ஆண்டுகளில் மே மாதமே அருவிகளில் நீர் வர ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கே குறுமுனி என்று அழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபாடு செய்த குற்றாலநாதர் கோயில் உள்ளது.
பூலித்தேவன் நினைவகம்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முதல் முதலில் போர் தொடுத்த மாவீரன் பூலித்தேவன். அவர் 1715-ஆம் ஆண்டு பிறந்தார். 1755-ல் ஆங்கில தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் துவங்கினார். ஆங்கிலேயரை பல போர்களில் தோற்கடித்தார். பூலித்தேவன் சங்கரன்கோயிலில் கடவுளை வணங்கிக் கொண்டிருந்த போது, ஆங்கிலப் படையினர் அவரைச் சூழ்ந்து பிடிக்க முயன்றனர். ஆனால் பூலித்தேவன் அங்கிருந்த குகை வழியாக தப்பித்தார். அதன்பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த மாவீரனுக்கு சிவகிரி வட்டத்தில், புளியங்குடி வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்சேவலில் அவருக்கு நினைவகம் கட்டப்பட்டுள்ளது.
பழைய பொருட்கள் கண்டுபிடித்தல்
உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையையும், அதைச் சுற்றியுள்ள அகழியையும் இன்றும் உக்கிரன் கோட்டையில் காணலாம். வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்தார்கள் வாழ்ந்த அரண்மனை இன்னும் இருக்கிறது. மலையடிக் குறிச்சி பகுதியில் பழங்கால மக்களின் இறந்தவர்களை புதைத்த தாழிகள் கிடைத்துள்ளன.
பிரானூர் பார்டர் புரோட்டா
செங்கோட்டைக்கு அருகே உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும், புளியங்குடி மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தின் புரோட்டாவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது.
சங்கரன்கோவில் பிரியாணி
சங்கரன்கோவில் பகுதியின் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் சுவையானது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும், இதன் சிறப்புகளாக உள்ளன. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் பகுதிகளில் வளர்க்கப்படும் கன்னி ஆடுகள் மிகவும் சுவையானவை. இந்த பிரியாணியை சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல், வெளியூர் மற்றும் வெளி மாநில மக்களும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
செவ்வாடு
செவ்வாடு ஆடுகள் மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் உலகளவில் அங்கீகாரம் பெற்றவை. இவை அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரண்டு வகைப்படும்.