சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்

கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை சருமத்திற்கு ஒரு சூப்பர் ஃபுட் ஆகும்.

கொய்யா இலையில் ஐசோஃப்ளேவனாய்டுகள் உள்ளதால் இவை ஆண்டிமைக்ரோபியல் தன்மைகளை பெற்றுள்ளது, மேலும் காலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், கரோட்டினாய்டுகள் தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சி நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதேபோல இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் சேதத்தை சரிசெய்கின்றன.

கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பளிச்சிட வைக்கும்.

கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் நீங்கும். சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கவும் கொய்யா இலை உதவும்.

அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

அதிக மாசுக்கள் ஏற்படுவதால் தோலில் பல வகையான நோய் தொற்றுகளும் வருகின்றது. இதற்கு தீர்வு தருகிறது கொய்யா இலை. இதில் அதிகம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இருப்பதால் தோலின் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தோல் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

இதையும் படிக்கலாம் : சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *