ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார்.

வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும் கூட விதிவிலக்கல்ல.

எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால் தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன் மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.

சூரியன்

சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

வருணன்

காற்றாலோ, நீராலோ ஆஞ்சநேயருக்கு மரணம் ஏற்படாது என்றார்.

யமதர்மன்

யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார்.

குபேரன்

ஆஞ்சநேயர் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார்.

சிவபெருமான்

தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

விஸ்வகர்மா

தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார்.

பிரம்மதேவர்

பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார்.

இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

இதையும் படிக்கலாம் : அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *