குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது பிஸ்கட் தான். இன்றைய காலக்கட்டத்தில் தாய்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் உணவுகளையே கொடுக்கின்றனர். பிஸ்கட்டுகள், முழுக்க முழுக்க உடலுக்குத் தீங்கானவைதான். அது, குழந்தைகளின் வயிற்றை நிரப்புமே தவிர ஆரோக்கியத்தைத் தராது.

பிஸ்கட் தயாரிக்க சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. மேலும், பிஸ்கட்டுகள் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தி) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்.

பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம். ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்படுகின்றது.

குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகளை சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்ற உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றன.

பெரும்பாலான குழந்தைகள், க்ரீம் பிஸ்கட்டுகளின் பிரியர்களாக இருப்பார்கள். சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், க்ரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை.

க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. மேலும், அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

உப்பு பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு  பிஸ்கட்டுகளை சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.  பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும்.

குழந்தைகள் பாலுடன் பிஸ்கெட்டை சேர்த்து சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இது, உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

எந்த பிஸ்கட்டுகளிலுமே இயற்கை உணவுக்கு இணையான சத்துகள் இருப்பது கிடையாது. எனவே, குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக்கொடுப்பதே ஆரோக்கியமானது.

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்களில், நம் பாரம்பரிய தின்பண்டங்களான கடலை மிட்டாய், பாசிப்பருப்பு உருண்டை, உளுந்து வடை, பேரீச்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை ஸ்நாக்ஸாகக் கொடுத்தனுப்பலாம்.

குழந்தைகளுக்கு, தினம் ஒரு நிறத்தில் பழங்களை கொடுத்தனுப்பலாம். கொய்யா, பப்பாளி, சப்போட்டா, மாதுளை, அன்னாசி போன்ற பழங்களைக் கொடுத்தனுப்பலாம். முளைகட்டிய தானியங்கள்,வேகவைத்த சுண்டல்கள் போன்றவற்றை கொடுத்தனுப்பலாம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க கெமிக்கல்கள் பயன்படுத்துவார்கள்.

இதையும் படிக்கலாம் : குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *